Thursday, May 24, 2012

புகையிலை - ஒரு மாபெரும் கொலைகாரன், ஒரு நாளைக்கு 2500 பேரை கொல்லும் தீவிரவாதி!


தினந்தோறும் சராசரியாக 2500 பேரை இந்தியாவில் மட்டும் கொல்லும் ஒரு தீவிரவாதி தான் புகையிலை. எனவே தான் உலக சுகாதார நிறுவனம் (Word Health Organization) 1988 ஆம் ஆண்டே, மே 31 - ஐ உலக புகையிலை ஒழிப்பு நாளாக (World No Tobacco Day) அறிவித்து உள்ளது. ஆனால் காதலர் தினம் கொண்டாடும் நம்மில் பலருக்கு இந்த புகையிலை ஒழிப்பு தினம் பற்றி தெரிந்திருக்காது. ஏனெனில் ஊடகங்கள் இது பற்றி பெரிதாய் பேசுவதில்லை.

ஒரிருவர் கொல்லப்படும் விபத்துகள் பற்றியும், சிறு திருட்டுகள் பற்றியும் செய்திகள் வெளியிடும் ஊடகங்கள் ஒரு நாளைக்கு 2500 பேரை இருதய நோய், புற்றுநோய், காசநோய், நுரையீரல் நோய் போன்ற பல்வேறு நோய்களால் கொல்லும் புகையிலை பற்றி செய்திகள் வெளியிடுவதில்லை.

ஓர் ஆண்டுக்கு இந்தியாவில் சராசரியாக 10 இலட்சம் பேர் புகையிலை சார்ந்த நோய்களால் பாதிக்கப்பட்டு மரணமடைகிறார்கள். ஆனால் இறக்கும் ஒவ்வொருவரின் இறப்பிற்கும் என்ன காரணம் என்று கேட்டால், அந்தந்த நோய்களின் பெயரைத்தான் சொல்வார்கள். உண்மையில் அந்த நோய்கள் ஏற்பட காரணம் என்னவென்று ஆராய்ந்தால் மட்டுமே புகையிலை தான் அந்த மரணத்திற்கு அடிப்படை காரணம் என்று நம்மால் புரிந்து கொள்ள முடியும்.

அதுபோக புகையிலை பொருட்களை பயன்படுத்தியவுடன் யாரும் நோய்க்கு ஆளாவதில்லை, இறப்பதில்லை. புகையிலை என்பது ஒரு கொஞ்சம் கொஞ்சமாக உடலை வருத்தி, தொடர்ந்த உபயோகத்திற்கு பிறகு 'புகையிலை பயன்பாட்டால் தான் இவர் இறக்கிறார்' உண்மையின் சுவடே தெரியாமல் கொல்லும் ஸ்லோ பாய்ஸன்.

பல வெளிநாடுகளில் இந்த அடிப்படை காரணத்தை புரிந்து கொண்டு, நீதிமன்றங்களில் புகையிலை நிறுவனங்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்து, அதில் வெற்றி பெற்று பலரும் இழப்பீட்டு தொகையாக பல இலட்சங்களை பெற்றுள்ளார்கள்.

நீங்கள் இந்த கட்டுரையை படித்துக் கொண்டிருக்கும் இந்த நொடியில் பல பேர் புகையிலையால் இறந்து கொண்டு இருப்பார்கள். தினம் தினம் நிகழும் இந்த 2500 மரணங்கள் அனைத்தும் தடுக்கப்பட்டு இருக்க வேண்டியவை. தங்கள் சுய லாபத்திற்காக புகையிலை நிறுவனங்கள் செய்யும் விளம்பர யுக்திகளும், மக்களை ஆட்டிப்படைக்கும் அறியாமை என்ற கொடிய அரக்கனும் தான் இந்த கொலைகளுக்கு மிக முக்கிய காரணங்கள்.

இந்த கொலைகளை தடுக்க வேண்டி உலக நாடுகள் இணைந்து உருவாக்கியது தான் உலக சுகாதார நிறுவனத்தின் புகையிலை கட்டுப்பாட்டிற்கான சட்டப்பூர்வமான ஒப்பந்தம் (Framework Convention for Tobacco Control). முன் எப்போதும் இல்லாத வகையில் பொது சுகாதாரத்திற்காகவே, உலக நாடுகள் இணைந்து சட்டப்பூர்வமாக கொண்டு வந்திருக்கும் முதல் ஒப்பந்தம் இது. இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டால், அதன் ஷரத்துக்களை பின்பற்றியே ஆக வேண்டும்.

இந்த சட்டப்பூர்வமான ஒப்பந்தம் பற்றிய பேச்சுகள் 1996 ஆம் ஆண்டு தொடங்கி, உலக சுகாதார நிறுவன அவையில் 2003 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டு உலக நாடுகளின் கையெழுத்துக்காக திறந்து வைக்கப்பட்டது. 2005 ஆம் ஆண்டு 40 நாடுகள் கையெழுத்திட்டதால், இந்த ஒப்பந்தம் செயல்பாட்டிற்கு வந்தது.

2011 ஆண்டின்புள்ளி விவரப்படி,இந்த ஒப்பந்தத்தில் 172 உலக நாடுகள் கையெழுத்து இட்டு இருக்கின்றன. நமது இந்திய நாடு 2004 ஆண்டிலேயே இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டுள்ளது. ஒப்பந்தத்தில் கூறியுள்ள படி, புகையிலை கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை இந்திய அரசு எடுத்துக்கொண்டு வருகிறது.

இந்த ஒப்பந்தத்தின் படி, 2020 ஆண்டுக்குள் இந்தியா தனது புகையிலை பயன்பாட்டில் 50% குறைத்துக் கொள்வதாக உறுதி கூறியுள்ளது. அதற்கான நடவடிக்கைகளிலும் இறங்கி உள்ளது.

இப்படி மானாவாரியாக மக்களை கொல்லும் இந்த புகையிலைப் பொருட்களை கட்டுப்படுத்த அரசு என்ன செய்கிறது என்று பலரும் கேள்வி கேட்கிறார்கள். புகையிலை பொருட்களை முழுவதுமாக தடை செய்து விட வேண்டியது தானே என்றும் சொல்கிறார்கள். சரி தான், இன்னும் சில ஆண்டுகளில் புகையிலைப் பொருட்களை முழுவதுமாக தடைசெய்யத்தான் போகிறார்கள், அதன் முதல் பகுதியாகத்தான் புகையிலை பயன்பாட்டில் 50% குறைப்பது. பின்னர் படிப்படியாக குறைத்து முழுவதுமாக நிறுத்தப்போகிறார்கள். ஆனால் 'எப்போது' என்பது தான் விடை தெரியாத கேள்வி!

புகையிலை கட்டுப்பாட்டு ஒப்பந்தத்தின்படி, சிகெரெட் மற்றும் மற்ற புகையிலை பொருட்கள் கட்டுப்பாடு சட்டம் (Cigarette and Other Tobacco Products Act- COTPA 2003)கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின் படி
  1. கல்வி நிறுவனங்களைச் சுற்றியும், உள்ளேயும் புகையிலை பொருட்கள் விற்பது தடை செய்யப்பட்டுள்ளது. சுற்றி உள்ள கடைகளில் இது பற்றி பலகை தொங்க விடப்பட்டு இருக்க வேண்டும். கல்வி நிறுவனங்களின் நுழைவாயில்களில் “இது ஒரு புகையிலை இல்லா கல்வி நிறுவனம்” என்ற பலகையும், அதில் புகையிலை பொருட்கள் பயன்படுத்தினால யாருக்கு புகார் கொடுக்க வேண்டும் என்ற விபரமும் எழுதப்பட்டு இருக்க வேண்டும்.
  2. புகையிலை பொருட்களை ஊடகங்களிலும், விளம்பர பலகைகள், போஸ்டர்கள் போன்றவற்றின் மூலமாகவும் விளம்பரம் செய்வது தடை செய்யப்பட்டுள்ளது.
  3. எல்லா புகையிலை பொருட்கள் மீதும் "புகையிலை புற்றுநோய் உண்டாக்கும்" என்ற எச்சரிக்கை வாசகமும், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட உடலுறுப்புகளின் கோரமான, பயமுறுத்தும் படங்களும் இருக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
  4. கடைகளில் புகையிலை பொருட்கள் மற்றவர்களுக்கு தெரியும் வகையில் வெளியில் வைக்கவோ, தொங்க விடவோ கூடாது. பற்ற வைக்க தீக்குச்சி, தீப்பட்டி, லைட்டர், மண்ணெய் விளக்கு போன்றவற்றை வைக்கக்கூடாது.
  5. 18 வயதுக்கு உட்பட்டவர்கள் புகையிலை பொருட்களை வாங்கவோ விற்கவோ கூடாது. இது பற்றி வாசகம் எழுதப்பட்டு பலகைகள் தொங்க வைக்கப்பட்டு இருக்க வேண்டும்.
  6. புகைபிடிப்பதால், அருகில் இருப்பவர்களுக்கும் புற்றுநோய் போன்ற பல்வேறு விதமான நோய்கள் ஏற்படும் என்ற அறிவியல் உண்மையை கருத்தில் கொண்டு, பொது இடங்களில் புகைபிடிப்பதும், புகையிலை பொருட்களை பயன்படுத்துவதும் தடைசெய்யப்பட்டுள்ளது. மீறினால் பயன்படுத்தியவருக்கும், அந்த இடத்தின் பொறுப்பாளருக்கும் அபராதம் அல்லது சிறைத்தண்டனை விதிக்கப்படும்.
  7. ஊடகங்களில் புகையிலை பொருட்கள் பயன்படுத்தப்பட்டால், அது பற்றிய எச்சரிக்கை வாசகம் காண்பிக்கப்பட வேண்டும்.

இவ்வாறு கடுமையான சட்டங்கள் இருந்தும், புகையிலை பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது. இதற்கு மிக முக்கிய காரணம் புகையிலை நிறுவங்கள் தங்கள் பொருட்களை அதிக அளவில் விற்பனை செய்வதற்காக புது புது உக்திகளை கையாண்டு வருவது தான்.

உலக சுகாதார நிறுவனம் “புகையிலை நிறுவனங்களை குறுக்கீடுகளை தடுப்பது” (Stopping Tobacco Industry Interference) என்பதனை இந்த ஆண்டு புகையிலை ஒழிப்பு தின கருப்பொருளாக அறிவித்து உள்ளது. எனவே புகையிலை நிறுவனங்கள் செய்யும் தந்திரங்களை பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தி அவற்றை தடுப்பதே இந்த ஆண்டு புகையிலை ஒழிப்பு தினத்தின் குறிக்கோள்.

COTA 2003 சட்டத்தின் படி, புகையிலை பொருட்கள் விளம்பரம் செய்வது தடைசெய்யப்பட்டுள்ளது. ஆனால் சட்டத்திற்கு புறம்பான வகையில் புகையிலை நிறுவனங்கள் திரைப்படங்களில், கதையின் கதாபாத்திரங்கள், குறிப்பாக ஹீரோக்கள் சிகெரெட் பயன்படுத்துவது போல் காண்பித்து அதன் மூலம் இளைஞர்களிடம் புகையிலை மற்றும் சிகெரெட் பழக்கம் 'பெண்களுக்கு பிடித்தது', 'இளமையின் சின்னம்' என்பது போன்ற மாயத் தோற்றத்தை ஏற்படுத்தி வருகின்றன.

குழந்தைகள் பயன்படுத்தும் நோட்டுப்புத்தகங்கள், குழந்தைகள் விரும்பி சாப்பிடும் பிஸ்கட்டுகள், சிப்ஸ், நூடுல்ஸ் போன்ற பொருட்கள், பெண்களை கவரும் வகையில் அவர்கள் பயன்படுத்தும் அழகு சாதன பொருட்களான சோப்பு, சிகப்பழகு கீரிம், ஷாம்பு போன்ற பொருட்களை தயாரித்து அவற்றை விளம்பரப்படுத்தும் போது தங்களின் புகையிலை நிறுவனத்தையும் சேர்த்து விளம்பரப்படுத்தி வருகிறார்கள்.

புகையிலை பொருளின் பெயரிலேயே மவுத் ஃப்ரஷ்னர், தீப்பெட்டி போன்ற பொருட்களை தயாரித்து அதை விளம்பரப்படுத்துவதன் மூலம் புகையிலை பொருட்களை விளம்பரபடுத்துகிறார்கள்.

அதே போன்று புகையிலை விளம்பரங்கள் சட்டத்தால் தடைசெய்யப்பட்டுள்ளது என்ற உண்மை அறியாத வணிகர்களை பயன்படுத்தி, புகையிலை நிறுவனங்கள் தங்கள் பொருட்களை விளம்பரப்படுத்தி வருகின்றன.

புகையிலை பொருட்களை அதிகமாக விற்றால் கமிஷன் தருவது, அலங்கார பொருட்கள் தருவது, புகையிலை பொருட்களை வண்ண மயமாக காண்பிக்க செய்வது, விளம்பரப் பலகையில் தங்களின் கடைப்பெயரை அச்சிட்டுத் தருவது, போஸ்டர்கள் தருவது போன்ற பல்வேறு வியாபார உத்திகளை கையாண்டு வருகிறார்கள்.

இவை அனைத்தும் சட்டத்திற்கு புறம்பானவையே! புகையிலை கட்டுப்பாட்டிற்கு அரசும், குடிமை சமூகமும், அரசு சாரா நிறுவனங்களும் எடுத்து வரும் செயல்பாடுகளுக்கு அதிகம் முட்டுக்கட்டையாய் இருப்பது, புகையிலை நிறுவனங்கள் மட்டுமல்ல, மக்களின் அறியாமையும், ‘இதனால் எனக்கென்ன’ என்ற மனப்பான்மையும் தான்!

மக்கள் விழித்துக்கொண்டு, இந்த புகையிலை கொலைகாரனைப்பற்றி பேசினால், ஊடகங்கள் நிச்சயம் விழித்துக்கொள்ளும். ஊடங்களின் அழுத்தத்தால் அரசும் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.

நன்றாக சிந்தித்து பாருங்கள்! உங்கள் அன்புக்குரிய உறவினர்களிலும் , நண்பர்களிலும், அக்கம்பக்கத்தினர்களிலும் நிச்சயமாக ஒருவராவது இந்த புகையிலை தீவிரவாதியால் கொலை செய்யப்பட்டு இருப்பார், காயப்பட்டு இருப்பார். அவ்வாறான கொலைகள் மீண்டும் மீண்டும் நிகழக்கூடாது என்று நீங்கள் நினைத்தீர்களானால்,இது பற்றி பேசவும் எழுதவும் தொடங்குங்கள்! பேச, எழுத முடியாமல் போனால் பரவாயில்லை, இந்த செய்தியை Face Book-ல் 'Share' செய்வதன் மூலமாவது உங்கள் பங்கை நிறைவேற்றுங்கள்! நன்றி!

உங்களுக்கு தெரியுமா?

¬    புகையிலை பொருளான சிகெரெட்டில் உடலை நோய்க்கு உள்ளாக்கும் 4000 நச்சு பொருட்கள் இருக்கின்றன

¬    அதில் 56 நச்சு பொருட்கள் புற்று நோயை உருவாக்கக்கூடியவை.

¬    புகையிலை பயன்படுத்துபவர்களுக்கு புற்றுநோய், மாரடைப்பு, ஆண்மைக்குறைவு, நுரையீரல் நோய்கள், மூளை பாதிப்பு போன்ற 55க்கும் மேற்பட்ட பிரதான நோய்கள் வருகின்றன.

¬    ஒவ்வொரு தடவையும் புகையிலை பொருட்கள் பயன்படுத்தும் போது, அவர்களின் வாழ்நாளில் 7 நிமிடங்களிலிருந்து 14 நிமிடங்கள் வரை குறைகிறது. மேலும் அவர்களில் வாழ்நாளில் சராசரியாக 15 ஆண்டு கால வாழ்வை இழக்க நேரிடுகிறது.

¬    புகைபிடிப்பவர்கள் மட்டுமின்றி, அருகில் உள்ளோரையும், புகையிலை விவசாயிகளையும் கடுமையான புகையிலை சார்ந்த நோய்கள் தாக்குகின்றன.

No comments:

Post a Comment