Monday, February 18, 2013

சரளமாக ஆங்கிலத்தில் பேசுவது சாத்தியமே!

ஆங்கிலம் எளிது
ஆங்கிலத்தில் பேசுவது என்பது தமிழக இளைஞர்களில், பெரும்பாலோனோர்க்கு எட்டாக்கனியாக இருந்து வருகிறது. தமிழ் வழியில் படித்தாலும் சரி, ஆங்கில வழியில் படித்தாலும் சரி, ஆங்கிலத்தில் பேசுவது என்பது கஷ்டமாகவே உள்ளது. இதற்கு காரணங்கள் என்னென்ன என்பதை முதலில் பார்த்தால், அவற்றை எப்படி சரி செய்வது என்பதனை எளிதில் கண்டுபிடித்து விடலாம்.

ஆங்கிலம் என்பது ஒரு மொழி என்பதை மறந்து விட்டு அல்லது மறைத்து விட்டு பள்ளிக்கல்வியில் பாடத்திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. ஆங்கிலம் என்பது ஒரு பாடம் என்பது போல் பாடத்திட்டங்கள் உள்ளன. 
மேலும் ஆங்கிலம் என்பது ஒரு அறிவு என்று பலர் சொல்ல நான் கேட்டிருக்கிறேன். அவர்கள் இங்கிலீஷ் நாலேட்ஜ் என்று குறிப்பிடுகிறார்கள். இப்படி சொல்வது முற்றிலும் தவறு! ஒரு குறிப்பிட்ட பாடத்தில் அறிவு பெற அந்த பாடத்தை படிக்கலாம். ஆனால் ஒரு குறிப்பிட மொழியில் புலமை பெற அந்த மொழியை படிக்க கூடாது. கற்றுக்கொள்ள வேண்டும்.

அறிவியல் பூர்வமாக பார்த்தால், மொழியை கற்றுக்கொள்ளும் விதமும், பாடத்தை படிக்கும் விதமும் வெவ்வேறு. எடுத்துக்காட்டாக, வேதியியல் பாடத்தை எடுத்துக்கொள்ளுங்கள். வேதியியலில் அறிவு பெற, வேதிப்பொருட்கள், சமன்பாடுகள், அவற்றை பயன்படுத்தும் முறை போன்றவற்றைப் புத்தகத்தை படித்தோ அல்லது ஆசிரியர்கள் மூலமோ தெரிந்து கொள்ள  வேண்டும். 

ஆனால் நமது தாய் மொழியை கற்றுக்கொள்ள புத்தகங்களையோ அல்லது ஆசிரியர்களையா நாடினோம்? இல்லையே!
எந்த ஒரு மொழியையும் கற்றுக்கொள்வதில் நான்கு பகுதிகள் உள்ளன.
1.       கவனிப்பது (Listening)
2.       பேசுவது (Speaking)
3.       படிப்பது (Reading)
4.       எழுதுவது (Writing)
நமது தாய் மொழியை கற்றுக்கொள்ள, முதலில் நாம் ‘கவனிக்க’ தொடங்கினோம். நமது குடும்பத்தினரும், அக்கம் பக்கத்தினரும் நம்மைச் சுற்றி பேசுவதை புரியாமல் கவனித்து பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக புரியத்தொடங்கி ‘பேச’ தொடங்கினோம். பேசும் போது அப்படியே சரளமாக வாக்கியங்களில் நாம் பேசத் தொடங்கவில்லை. முதலில் ஓரெழுத்து, ஈரெழுத்து, மூன்றெழுத்துக்கள் உள்ள எளிய சொற்களை நாம் கற்க தொடங்கினோம். எடுத்துக்காட்டாக வா, போ, பூ,  அம்மா, அப்பா, அண்ணா, மாமா, தண்ணீ, காக்கா, நாய் போன்றவை. பிறகு எளிய வாக்கியங்களை வினைச்சொற்கள் கொண்டு பேசினோம். அப்போது பேசுவதில் நாம் செய்த தவறுகளுக்கு தண்டனைகள் கிடைக்கவில்லை, யாரும் கேலி செய்யவில்லை. நாம் சரி செய்யப்பட்டோம். இதற்கெல்லாம் பிறகுதான் படிப்பதும், எழுதுவதும் வந்தன. 

ஆனால் நம்மில் பலர் எப்படி ஆங்கில மொழியை கற்றுக்கொண்டோம்? முதலில் படிக்க, எழுதத்தொடங்கி பேச வந்தால், தவறாக பேசினால் கேலி செய்வார்கள் என நினைத்து நினைத்தே ஆங்கிலத்தில் பேசாமல் இருந்து விடுகிறோம். கடைசியில் ஆங்கிலத்தை கவனித்தல் என்பது பலருக்கு வாய்ப்பதே இல்லை. 

ஆக ஒரு மொழியை கற்க வேண்டிய முறையில் ஆங்கிலத்தை நாம் கற்காததும், ஒரு பாடத்தை படிப்பது போன்று ஆங்கிலத்தை படித்ததும்தான் இப்போது நாம் ஆங்கிலம் பேச முடியாமல் போவதற்கு அடிப்படை காரணங்கள். 

எனவே ஆங்கிலம் பேச தொடங்குவதற்கு முன்பாக ஆங்கிலத்தை கவனிக்க தனக்கு பொருத்தமாக உள்ள வழிகளை கண்டுபிடிக்க வேண்டும். ஆங்கிலத்தை அதிகம் கேட்டிராதவர்கள் வெளிநாட்டு ஆங்கில செய்தி அலைவரிசைகளைப் பார்த்தால் ஒன்றும் புரியாது. அவ்வாறு செய்தால், ‘அய்யோ, ஒன்றும் புரியவில்லை’ என்று நம்பிக்கை இழந்து விட வாய்ப்பு உண்டு. இருக்கும் வழிகளில் உங்களுக்கு பொருத்தமான, உங்களுக்கு கேட்டால் புரியும் வகையில் உள்ள வழியை தேர்ந்தெடுத்து செயல்படுத்த வேண்டும். இன்று ஆங்கில மொழியை கவனிக்க பல வாய்ப்புகள் உள்ளன. எடுத்துக்காட்டாக பல தமிழ் அலைவரிசைகளில், ஆங்கிலச் செய்தியை தமிழர்கள் வாசிக்கிறார்கள். அந்த ஆங்கிலம் ஓரளவுக்கு எல்லோருக்கும் புரியும், அதே போல் இந்தியாவில் எடுக்கப்பட்ட ஆங்கிலத் திரைப்படங்களை தமிழ் அல்லது ஆங்கில ‘சப் டைட்டில்’ உடன் பார்க்கலாம். 

கேட்க கேட்க, ஆங்கில மொழியின் உச்சரிப்புகளும், வாக்கிய அமைப்புகளும் உங்களுக்கு ஓரளவுக்கு பரிச்சயமாகி விடும். எந்த மொழியிலும் ஆரம்பத்தில் பேசுவதற்கு தேவை சொற்களும், எளிமையான வாக்கியங்களை அமைக்க இலக்கணமும்.
ஆங்கிலச் சொற்களுக்கு நம் இந்தியர்களிடம் பஞ்சமே இருக்காது.  நாம் பயன்படுத்தும் சொற்களில் ஆங்கிலச் சொற்கள் பல இருக்கின்றன. அவற்றை வைத்து கொஞ்சம் இலக்கணத்தையும் கற்றுக்கொண்டு இரண்டு, மூன்று வார்த்தைகள் கொண்ட எளிய வாக்கியங்களில் தொடங்கி, பின்னர் எளிமையாக கேள்வி கேட்க கற்றுக்கொண்டால் ஆங்கிலத்தில் பேசும் கலையை கற்றுக்கொள்ளலாம். 

பேச்சு பயிற்சி வகுப்புகள் உங்களுக்கு ஆங்கிலத்தை கவனிக்கவும், இலக்கணம் கற்றுக்கொடுத்து கொஞ்சம் கொஞ்சமாய் பேசவும் உதவலாம். அவ்வாறான வகுப்புகளுக்கு போக முடியவில்லை எனில், ஆங்கிலம் தெரிந்தவர்களிடம் அவ்வபோது ஆங்கிலத்தில் உரையாடியும், கவனித்தும் வரலாம். ஆங்கிலம் எழுதப்படிக்க தெரியாத பலர், மற்றவர்களிடம் உரையாடியே ஆங்கிலம் கற்றுக்கொண்டிருப்பதை நான் பார்த்திருக்கிறேன்.
மற்றவர்களிடம் உரையாட வாய்ப்பு கிடைக்கவில்லை எனில், உங்களுடன்  நீங்களே ஆங்கிலத்தில் பேசலாம். நீங்கள் உங்களுக்குள் சிந்திப்பதை ஆங்கிலத்தில் செய்யலாம். 

உங்களுக்கு தெரியாத வார்த்தைகளை, ஆங்கிலம் தெரிந்தவர்களிடம் கேட்டோ அல்லது உங்கள் தாய்மொழியில் உள்ள சொற்களுக்கு நிகரான ஆங்கில வார்த்தைகளை அளிக்கும் சொல்லகராதிகளை பார்த்தோ தெரிந்து கொள்ளலாம். 

தொடந்து இவ்வாறு ஆங்கிலத்தை கவனித்தும், கூச்சப்படாமல், குற்ற உணர்வில்லாமல் ஆங்கிலத்தை பேசியும் வந்தால் நாளைடைவில் சரளமாக ஆங்கிலத்தில் பேசுவது சாத்தியமே!

குறிப்பு: பலரும் ஆங்கில அறிவு (English knowledge)  என்ற சொல்லாடலை பயன்படுத்துகிறார்கள். உண்மையில் அவர்கள் சொல்ல வருவது என்னவென்றால், ஆங்கிலத்தில் புலமை (English fluency) என்பதுதான். ஆகவே ஆங்கிலத்தில் புலமை பெற புத்தகங்கள் கொண்டு தேர்வுக்காக படிப்பது போல படிக்காமல், கவனிக்கவும், பேசவும் தொடங்குங்கள். வாழ்த்துக்கள்! 
 


9 comments:

  1. பயன் தரம் பதிவு. எடுத்தாண்டுள்ளேன்.
    நன்றி

    ReplyDelete
  2. Yes it is cent percent true... Bcz i came from tamil medium school background. I was totally fed up due to english fluency. When I came out from my UG graduation, my life was totally changed. Bcz i learned a lot from my failure and mistakes which I had made.. now even though I am not able to talk very fluently, i am able to talk some what fluently in english... So pls follow this whatever he said and think your thoughts only in english. So pls don't translate in mother tongue and the dont translate in english... Keep searching and do well.. victory is not impossible if your way is correct ...

    ReplyDelete
  3. female E g g Donorz in India with the sum of $500,000.00 3 crore,Email: jainhospitalcare@gmailcom
    what sapp +91 9945317569

    ReplyDelete