Friday, April 8, 2011

தனிமனித கருத்துக்கள் & ஆரோக்கியமான உறவுகள்

உளவியலின் மிக அடிப்படை தத்துவம் என்னவென்றால், ஒவ்வொரு மனிதனும் தனித்தன்மை வாய்ந்தவன். எந்த இரு மனிதர்களும் சிந்திப்பதிலும், புரிந்து கொள்வதிலும் மிகச் சரியாய் ஒரே போல் இருப்பதில்லை, கிட்டத்தட்ட ஒரே பின்புலம் கொண்ட இரட்டையர்கள் கூட வெவ்வேறு விதமாக சிந்திக்கிறார்கள். ஏனெனில் ஒவ்வொருவரும் வெவ்வேறு விதமான அனுபவம், சிந்தனை முறை கொண்டவர்கள். வேறு விதமாய் சொல்ல வேண்டுமானால், கடவுள் ஒவ்வொருவரையும் ஒவ்வொரு விதமாய் படைத்துள்ளார். இதனால் கருத்து முரண்பாடுகள் ஏற்படுவது இயற்கை.

நாம் அனைவரும் வேவ்வேறு விதமாக சிந்திப்பதால் தான், நாம் முன்னேறிக் கொண்டு இருக்கிறோம், புதிய விஷயங்களை செய்கிறோம், நிறைய புதிய சாதனங்களை கண்டுபிடிக்கிறோம். நினைத்துப் பாருங்கள், ஒருவேளை உலகிலுள்ள அனைவரும் ஒரே மாதிரியாய் சிந்திக்கிறார்கள். என்ன ஆகும்? என்னைப் பொருத்தவரை, வாழ்வில் எந்த ஒரு சுவாரஸ்யமும் இருக்காது. நம் வாழ்வை சுவாரஸ்யமாக்குவதே நம் வாழ்வில் உள்ள பல முரண்பாடுகள் தான்!

ஒரு சமுதாய விலங்காக, நாம் ஒவ்வொருவரும் மற்றவர்களுடன் உறவு கொள்ள வேண்டியது அவசியம். உறவு முறை என நான் குறிப்பிடுவது வாழ்க்கைத்துணை, நண்பன், உடன் படிப்பவர்/பணிபுரிவர் அல்லது சக பயணி என அனைவரையும் குறிக்கும். உறவு முறைகளில் கருத்து வேறுபாடுகள் என்பது சகஜமானது. என்னை கேட்டீர்களானால், கருத்து வேறுபாடுகள் வாழ்வின் தவிர்க்க முடியாத ஒரு அங்கம் என்பேன். கருத்து வேறுபாடுகளை சரி செய்வது நம் உறவுகளை மேம்பட வைக்கிறது. உறவுகள் நமக்கு வேண்டுமெனில், நம் கருத்துக்களை பிறர் மனம் புண்படாமல் எடுத்து சொல்லி புரிய வைக்கவேண்டும். முடியாது போனால் மற்றவர்களில் கருத்துகளையாவது ஏற்று கொள்ள வேண்டும். சில நேரங்களில் பிடித்தோ பிடிக்காமலோ மற்றவர் கருத்துக்கு இணங்கிச் செல்ல வேண்டிய அவசியம் ஏற்படலாம்.

சமுதாய உறவுகளில் கருத்து வேறுபாடுகளை களைய பல விதிகளை நாம் வைத்துள்ளோம், எடுத்துக்காட்டாக, போக்குவரத்து விதிகள் மற்றும் பொது இடங்களில் புகை பிடிக்காமல் இருப்பது போன்றவை. ஆனால் தனிமனித உறவுகளில் நாம் அவற்றைப் போல் விதிகளை முறைப்படுத்துவதில்லை. அதனால் தான் கருத்து வேறுபாடு என்பது "பிரச்சனை" என மறுபெயர் சூட்டப்படுகிறது. வேறு விதமாக சொல்வதானால் கருத்து வேறுபாடுகள் என்பவை சரி செய்யக்கூடியவை, அவை சரி செய்யப்படாமல் போனால் வருவதே பிரச்சனை! ஆகவே தனிமனித உறவுகளிலும் 'விதிகளை' சம்மந்தப்பட்டவர்களுடன் கலந்தாலோசித்து உருவாக்க வேண்டும். அவ்விதிகளை கண்ணும் கருத்துமாக கடைபிடித்து வந்தாலே நிறைய பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்க முடியும்.

அதேபோல் ஒருவர் செய்யும் செயலுக்கு, பலரும் பல விதமான கருத்துக்களை தெரிவிக்கிறார்கள். சிலர் பாராட்டலாம், சிலர் இகழலாம், மேலும் சிலர் நடுநிலையாக இருக்கலாம். முன்னரே குறிப்பட்டது போல், ஒவ்வொருவரின் கருத்துக்களும் வேறுபடுவது எதனால் என்றால், அவர்களில் முந்தைய அனுபவத்தின் மூலம் கிடைக்கும் வேறுபட்ட பாடங்களினால்! நாம் இந்த உலகில் வாழும் வரையும், சொல்லப் போனால் மறைத்த பின்பும் கூட நம் செயல்களைப் பற்றிய எதிர்மறை கருத்துக்களுக்கு பஞ்சம் இருக்காது. இதில் மிகவும் முக்கியமான விஷயம், அவற்றை நினைத்து கவலைப்படுகிறோமா அல்லது எளிதாக எடுத்துக் கொள்கிறோமா என்பது தான். மற்றவர்களின் எதிர்மறை கருத்துக்கள் உங்களை பொருத்தவரை பொய் எனில், உடனே விட்டு விடுங்கள்,அதைப் பற்றி மேலும் மேலும் சிந்திக்காதீர்கள்! அக்கருத்துக்கள் உண்மை எனில் "நம் செயல்களை மேலும் சிறப்பாக செய்ய தரப்படும் தகவல்கள்" என எடுத்துக்கொள்ளுங்கள்! உண்மையில் அப்படிப்பட்ட தகவல்களை பெறுபவர்கள் அதிர்ஷ்டசாலிகள்,தங்களை மேம்படுத்திக்கொள்ள அக்கருத்துக்களை பயன்படுத்திக்கொள்வார்கள். ஆகவே எதிர்மறை கருத்துக்கள் பெற்றால் பெருமையாக உணருங்கள்!!

நாம் மற்றவர்களை பற்றி தெரிந்து கொள்ள, புரிந்துகொள்ள அவர்களின் செயல்களை ஆராய்வது மட்டுமே ஒரே வழி என்பதையும் நாம் மனதில் கொள்ள வேண்டும். அதே போல் மற்றவர்கள் நம்மைப் பற்றி புரிந்து கொள்ள, நம் செயல்களை ஆராய்ந்து, கருத்துக்கள் சொல்வது இயற்கை தானே? ஆகவே நம் செயலகளைப் பற்றி மற்றவர் ஆராய்ந்து கூறுவதை கேட்டு நம்மை நாம் உயர்த்திக்கொள்வோம்! இதன் மூலம் ஆரோக்கியமான உறவுகளை மேம்படுத்தி இனிமயாக வாழ்வோம்!! :-)

4 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. ஆகா, கார்த்திக் உங்கள் சிந்தனையில் எத்துணை தெளிவு. மகிழ்ச்சியாக இருக்கிறது. தொடர்ந்து எழுதுங்கள். நன்றி.

    ReplyDelete
  3. இந்த பதிவை 8ம் தேதி வலைச்சரத்தில் பகிர்ந்து கொண்டு இருக்கிறேன்.

    //நாம் அனைவரும் வேவ்வேறு விதமாக சிந்திப்பதால் தான், நாம் முன்னேறிக் கொண்டு இருக்கிறோம்,//

    உண்மை தான்.
    ஒரே மாதிரி சிந்தித்தால் உலகம் எப்படி இருக்கும்!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி கோமதி அரசு அவர்களே!:)

      Delete